புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவையில் பாரபட்சமாக நடந்து கொள்வதாக அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் பதவி நீக்க தீர்மான நோட்டீஸ் கொண்டு வரப்பட்டுள்ளது. 118 எம்பிக்கள் கையெழுத்திட்ட இந்த நோட்டீஸ் மக்களவை பொதுச் செயலாளர் உத்பல் குமார் சிங்கிடம் நேற்று முன்தினம் பிற்பகலில் வழங்கப்பட்டது. அதில் 4 இடங்களில் தேதியை குறிப்பிடும் இடங்களில் 2025 என பிழை இருந்தது. இவ்வாறு பிழையுடன் தாக்கல் செய்யப்படும் நோட்டீஸ் விதிமுறைகளின் படி நிராகரிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அதில் உள்ள பிழைகளை சரி செய்து, விரைவில் பட்டியலிட நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் ஓம்பிர்லா கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பின் எதிர்க்கட்சிகள் அந்த நோட்டீசை வாபஸ் பெற்று, மற்றொரு நோட்டீசை சமர்பித்தனர். சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வரும் மார்ச் 9ம் தேதி தொடங்கும் 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடரில் எடுத்துக் கொள்ளப்படும். இந்த தீர்மானம் அவையில் கொண்டு வரும் போது சபாநாயகரும் அதில் வாக்களிக்கலாம். ஆனால் சமநிலை ஏற்படும் போது அவர் வாக்களிக்க முடியாது.
