வேலூர், பிப்.3: வரும் சட்டமன்ற தேர்தலில் ஊர்க்காவல் படையினரின் பங்கு சிறப்பானதாக அமைய வேண்டும் என்று வேலூரில் நடந்த ஊர்க்காவல் படையினரின் பயிற்சி நிறைவு விழாவில் டிஐஜி காமினி பேசினார். தமிழ்நாடு ஊர்க்காவல் படையின் வேலூர் சரகத்தில் புதிதாக தேர்வான 31 ஊர்க்காவல் படை வீரர்களுக்கான 41 நாள் பயிற்சி வேலூர் நேதாஜி ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. இப்பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்தது. ஊர்க்காவல் படை சரக தளபதி வி.என்.டி.சுரேஷ் தலைமை தாங்கினார். எஸ்பி செல்வகுமார் முன்னிலை வகித்தார். ஊர்க்காவல் படை மண்டல தளபதி குமரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வேலூர் சரக டிஐஜி காமினி பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட 3 பேருக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது: இத்தேர்வுக்கு கடுமையான போட்டியிருந்தது. அத்தகைய போட்டியில் நீங்கள் தேர்வாகியிருக்கிறீர்கள்.
அப்படி தேர்வான நீங்கள் காவல்துறையுடன் இணைந்து பல நேரங்களில் பணியாற்றும் வாய்ப்பு வரும். அதனால் எந்த தவறும் நேராமல் மக்களுக்காக பணியாற்றுவது அவசியம். வரும் சட்டமன்ற தேர்தலில் உங்களின் ஒத்துழைப்பு சிறப்பானதாக அமைய வேண்டும்.