சென்னை: தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகள் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் வரும் 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது. தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் நடைபெற்று வந்த எஸ்.ஐ.ஆர் பணிகள் இன்றுடன் நிறைவு பெறவுள்ளன. தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி வெளியானது.
இதில் ஆட்சேபம் தெரிவிக்க விரும்புவர்களுக்காக ஜனவரி 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் முகாம்கள் மூலமாகவும் இணையவழியிலும் சுமார் 34 லட்சம் பேர் மறுபரிசீலனைக்காக விண்ணப்பித்திருந்தனர்.அதேபோல, வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றபோதும் உரிய ஆவணங்களை அளிக்காத சுமார் 12 லட்சம் பேருக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டிருந்தது.
இவர்களிடமிருந்து ஆவணங்களை பெற்று அதன் மீதான விசாரணையை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட நிலையில் அதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. அதன்படி எஸ்.ஐ.ஆர் பணிகள் இன்றுடன் நிறைவுபெறவுள்ள நிலையில் வரும் 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. இந்த இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் சுமார் 5 கோடியே 65 லட்சம் வாக்காளர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
