சென்னை: ராணிப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள டாடா நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.9,000 கோடி முதலீட்டில், 470 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலையின் மூலம் சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது. செப்.2024ல் அடிக்கல் நாட்டப்பட்டு, 16 மாதங்களில் உற்பத்தி தொடங்குகிறது.
இதுகுறித்து முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; “ராணிப்பேட்டை பனப்பாக்கம் சிப்காட் வளாகத்தில் ஒரு வரலாற்றுத் தருணம். டாடா ஜே.எல்.ஆர் (Tata JLR) – ராணிப்பேட்டை பனப்பாக்கம் சிப்காட் வளாகத்தில் ஒரு வரலாற்றுத் தருணம். வேகம், அளவு மற்றும் திராவிட மாடலின் நம்பகத்தன்மையை வரையறுக்கும் ஒரு நாள்!
ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் சிப்காட் (SIPCOT) வளாகத்தில் டாடா ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) நிறுவனத்தின் ஆடம்பர எரிபொருள் (ICE) மற்றும் மின்சார வாகன (EV) உற்பத்தி ஆலை திறந்து வைக்கப்பட்டது.
செப்டம்பர் 2024-ல் அடிக்கல் நாட்டப்பட்டது முதல், பிப்ரவரி 2026-ல் திறப்பு விழா வரை—ஒருங்கிணைந்த ஆளுமையும், தெளிவான நோக்கமும் எதைச் சாதிக்க முடியும் என்பதை தமிழ்நாடு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
இந்த 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான வரலாற்றுச் சிறப்புமிக்க முதலீட்டிற்கு ராணிப்பேட்டை மாவட்டத்தைத் தேர்வு செய்ததற்காகவும், இதன் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியதற்காகவும் டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது எதிர்கால முதலீடுகளுக்கும் தமிழ்நாடு எப்போதும் முதல் மற்றும் விருப்பமான தேர்வாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். தமிழ்நாடு ஒரு வாக்குறுதி அளித்தால், அதை உலகத் தரத்துடன் உறுதியாக நிறைவேற்றும்” என பதிவிட்டுள்ளார்.
