உலகக் கோப்பை டி20: ஜிம்பாப்வே மெகா வெற்றி; 103 ரன்னில் ஓய்ந்த ஓமன்

கொழும்பு: உலகக் கோப்பை டி20 8வது போட்டி கொழும்பு நகரில் நேற்று நடந்தது. அதில், ஓமன் – ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து களமிறங்கிய ஓமன் அணியின் துவக்க வீரர்கள் ஆமிர் காலீம், கேப்டன் ஜதிந்தர் சிங் தலா 5 ரன்களிலும், பின் வந்த ஹமத் மிர்ஸா, கரன் சோனவாலே ரன் எடுக்காமலும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பின்வந்தோரில் சுப்யன் மஹ்மூத் 25, விநாயக் சுக்லா 28 ரன் எடுத்தனர். பிற வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்ததால் ஓமன், 19.5 ஓவரில் 103 ரன்னுக்கு சுருண்டது. பின், 104 ரன் இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. அதன் துவக்க வீரர் பிரையன் பென்னட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 36 பந்துகளில் 48 ரன் விளாசினார். மற்றொரு துவக்க வீரர் டடிவன்ஷே மருமணி 21ல் வீழ்ந்தார். பின் வந்தோரில் பிரெண்டன் டெய்லர் 31 ரன் எடுத்து காயத்துடன் வெளியேறினார். இருப்பினும், 13.3 ஓவரில் ஜிம்பாப்வே 2 விக்கெட் மட்டுமே இழந்து 106 ரன் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.

Related Stories: