மேட்டூர், பிப்.3: சேலம் மாவட்டம் இடைப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ளது பெரியசோரகை பூமிரெட்டிப்பட்டி காலனி. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். வாடகை வீட்டில் வசித்து வரும் இவர்கள், தங்களுக்கு அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, முதல்வர் முதல் மேட்டூர் தாசில்தார் வரையிலும், 13 முறை மனு அளித்துள்ளனர். ஆனால் தாசில்தார் அலட்சியம் காரணமாக, முதல்வர் குறிப்பிட்டு கொடுத்த தேதியில், மக்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பூமிரெட்டிப்பட்டி காலனியை சேர்ந்த பொதுமக்கள், நேற்று காலை மேட்டூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு, வீட்டுமனை பட்டா வழங்கும் வரை, காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பதாக கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டவர்கள், இலவச வீட்டுமனை பட்டா வழங்காவிடில், தங்களின் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றை ஒப்படைப்போம் என கோஷமிட்டனர்.