தவெக விளாத்திகுளம் தொகுதி பொறுப்பாளர் பிரவீன் தலைமையில் நிர்வாகிகள் மணிகண்டன், கார்த்தி, மணி, சுமதி, ராமுதாய் உள்பட ஏராளமானோர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அப்போது கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பேசுகையில், ‘‘தவெக வெற்றிக் கழகம் அல்ல அது வெற்றுக் கழகம். தவெகவினர் அதிமுகவில் இணைவது விளாத்திகுளத்தில் தொடக்கமாக உள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பு தவெகவில் இருந்து ஏராளமானோர் விலகி அதிமுகவில் இணைவார்கள். வானவில் வந்து உடனே மறைவது போல தவெகவும் விரைவில் மறையும். தியேட்டரில் படத்தை மட்டும் மக்கள் ரசிப்பார்கள்.
ஆனால் வாக்களிக்க மாட்டார்கள் என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும். விஜய் என்ன தான் பேசினாலும் பூனை என்றும் புலி ஆகாது. மெர்சல் படத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அப்போது விஜய் என்னை வந்து சந்தித்தார். படத்தின் பிரச்னை தீர்வதற்கு அதிமுக உதவிய பிறகு அதிமுகவிற்கு வாழ்நாள் முழுவதும் நன்றிக் கடனாக இருப்பேன் என்றார். ஆனால் தற்போது அதிமுகவை விமர்சித்து வருகிறார். எம்ஜிஆர் போன்று மூன்றெழுத்தில் பெயரை வைத்துக் கண்டால் வெற்றி பெறலாம் என்று விஜய் நினைப்பது ஒரு காலமும் நடக்காது. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் தற்போது நொந்து நூலாகி உள்ளார். அவரும் நீண்ட காலம் அங்கு பயணிக்க மாட்டார்’ என்றார்.
