நடிகையுடன் கள்ளத்தொடர்பு; நடிகர் விஜய்யிடம் விவாகரத்து கேட்டு மனைவி வழக்கு: கொடுமைப்படுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: நடிகரும் தவெக தலைவருமான விஜய்யிடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதா விஜய்க்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக பிரச்னை ஏற்பட்டு ஒரே வீட்டில் தனித்தனியாக வசிப்பதாகவும், இருவரும் பேசிக் கொள்வதில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.

மேலும் வீட்டின் முதல் தளத்தில் சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா சாஷா ஆகியோருடன் வசிப்பதாகவும், விஜய் தனியாக கீழ் தளத்தில் வசிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகர் விஜய், திரிஷாவின் வீட்டில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கூறினார். இது கடுமையான எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. அவரது கட்சியிலும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் அவரும் வருத்தம் தெரிவித்தார். இந்தநிலையில், செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் 3ம் தேதி விவாகரத்து கேட்டு சங்கீதா மனு தாக்கல் செய்தார்.

இந்த தகவல் வெளியானதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் செங்கல்பட்டு நீதிமன்றத்துக்கு நிருபர்கள் படையெடுத்தனர். இந்தநிலையில், அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருக்கும் தகவல்கள் வெளியாகின. அதில் அவர் கூறியிருப்பதாவது: இங்கிலாந்து நாட்டு குடிமகளான எனக்கும் ஜோசப் விஜய் சந்திரசேகருக்கும் கடந்த 1998 ஜூலை 10ம் தேதி இங்கிலாந்தில் பதிவு திருமணம் நடந்தது. பின்னர், 1999 ஆகஸ்ட் 25ம் தேதி சென்னை எழும்பூர் ராஜா முத்தையா மன்றத்தில் இந்து முறைப்படி திருமணம் நடத்தப்பட்டது.

நான் இந்து மதத்தை சேர்ந்தவள். என் கணவர் விஜய் கிறிஸ்தவர். இங்கிலாந்து மற்றும் சென்னையில் நடந்த திருமணத்தின் பதிவு விவரங்கள் என்னிடம் உள்ளது. அவற்றை இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாராக உள்ளேன்.  லண்டனில் பி.எஸ்சி (உயிரியல் மருத்துவம்) பட்டம் பெற்ற நான் திருமணத்துக்கு பிறகு கணவர் விஜய்யுடன் முதலில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் குடியேறினேன். பின்னர் அடையாறு கஸ்தூர்பா நகரில் வசித்து வந்தேன். இறுதியாக நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர், காசுரீனா டிரைவ் எண் 36ல் உள்ள வீட்டில் வசித்து வருகிறேன்.

இந்திய குடிமகனான என்னுடைய கணவர், தமிழ் திரைத் துறையில் முக்கிய நடிகராவார். அதிக வருமானம் பெறும் கதாநாயக நடிகரான அவர் மக்களிடையே பிரபலமானவர். கடந்த 2024ம் ஆண்டு அரசியலுக்கு நுழைந்து “தமிழக வெற்றி கழகம்” என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அது இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 48 வயதான நான் கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்துவந்தேன். எங்களுக்கு ஜேசன் சஞ்சய் (25) என்ற மகனும், திவ்யா சாஷா (20) என்ற மகளும் உள்ளனர்.

தொடக்கத்தில் திருமண உறவு அமைதியுடனும், ஒற்றுமையுடனும் இருந்தது. விஜய் எனக்கு வசதியான வாழ்க்கையை வழங்கினார். நான் வீட்டு பொறுப்புகள், குழந்தைகள் வளர்ப்பு மற்றும் என் கணவரின் நலனில் அக்கறையுடன் செயல்பட்டேன். நாங்கள் குடும்பத்துடன் விடுமுறைக்காக வெளிநாடுகளுக்கு பயணம் செல்வது வழக்கம். இங்கிலாந்தில் உள்ள என் பெற்றோரை ஆண்டுதோறும் சென்று பார்ப்பேன். சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் இதர விழாக்களுக்கு என்னை விஜய் அழைத்துச் செல்வார்.

திருமண வாழ்வில் சில சமயங்களில் சிரமங்கள் இருந்தாலும், இருவரும் அதை சமாளித்து ஒன்றாக வாழ்ந்து வந்தோம்.  கடந்த ஏப்ரல் 2021ல், விஜய் ஒரு நடிகையுடன் கள்ள உறவில் இருப்பது எனக்கு தெரியவந்தது. திருமண பந்தத்தை மீறிய அவரது துரோக செயல் எனக்கு ஆழ்ந்த மன வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியது. இது பற்றி விஜய்யிடம் கேட்டபோது, அந்த நடிகையுடனான கள்ள உறவை முறித்துக்கொள்வதாக உறுதி அளித்தார். ஆனால், வாக்குறுதியை மீறி அந்த உறவை அவர் கைவிடவில்லை.

இதனால் மன ரீதியாக சித்ரவதைக்கு ஆளானேன். செப்டம்பர் 2021 முதல் பிப்ரவரி 2022 வரை அவரிடம் வழக்கறிஞர் மூலம் சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தீர்வு எட்டப்படவில்லை. குழந்தைகளின் படிப்பு மற்றும் மனநலனை கருத்தில் கொண்டு இந்த விஷயத்தை தள்ளிப்போட்டுவிட்டேன். அப்போது கூட என் கணவர் விஜய்யின் நடத்தையை நான் மன்னிக்கவில்லை. இதன் பிறகு, என்னை உடல், மன ரீதியாக விஜய் புறக்கணிக்க தொடங்கினார். தாம்பத்திய உரிமையை மறுத்தார்.

தன்னுடைய சமூக மற்றும் திரைத்துறை வாழ்வில் இருந்து என்னை ஒதுக்கினார். வேண்டுமென்றே என்னிடம் இருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். என்னிடம் இருந்து விலகிய விஜய் 2021ம் ஆண்டு முதல், கெட்ட வார்த்தைகளால் திட்டினார். தனது செயல்களால் என்னை கைவிட்ட அவர் ஒரே வீட்டில் இருவரும் தனித்தனியாக வாழும் நிலைக்கு என்னை தள்ளினார். அதே நேரத்தில், விஜய் அந்த நடிகையுடன் வெளிநாடு பயணம் செய்து, பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

அந்த நடிகையும் இந்த பயணங்களில் எடுக்கப்பட்ட போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த சமூக வலைதள பதிவுகளுக்கு விஜய் எந்த மறுப்போ, எதிர்ப்போ தெரிவிக்காமல் மறைமுகமாக ஆதரவு தந்தார். இந்த போட்டோக்களால் நானும் என் குழந்தைகளும் மிகுந்த அவமானத்துக்குள்ளானோம். அந்த நடிகையுடன் விஜய் வைத்திருந்த வெளிப்படையான தொடர்பு எனக்கு மனவேதனையையும், குழந்தைகளுக்கு அவர்களது நண்பர்கள் மற்றும் சமூக வட்டாரத்தில் பெரும் அவமானத்தையும் ஏற்படுத்தியது.

தேவையற்ற விளம்பரத்தைத் தவிர்க்கவும், அனைவரின் கண்ணியத்தை பாதுகாக்கவும், தற்போது நடிகையின் பெயரை வெளியிடவில்லை. இருப்பினும், விசாரணையின் போது, விஜய்யிடம் இருந்து அழுத்தம் வந்தால் அந்த நடிகையின் பெயரை வெளியிட தயாராக இருக்கிறேன். தேவையெனில், விசாரணையின் போது அந்த நடிகையை இந்த வழக்கில் சேர்க்க நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும். கடந்த 2024ம் ஆண்டில் அந்த நடிகைக்கும், விஜய்க்கும் இடையேயான கள்ள தொடர்பு வெளிவரத்தொடங்கியது.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் தகவல்கள் பகிரப்பட்டன. இது எனக்கு இன்னும் அதிக மன உளைச்சலை ஏற்படுத்தியது. பொது வெளியில் இது பேசப்படுவதை தடுக்கவும், பிரச்னைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்ற எண்ணத்திலும் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2025ம் ஆண்டு பிப்ரவரி வரை வக்கீல் மூலம் விஜய்யுடன் பல நோட்டீஸ்களும், கடிதங்களும் பரிமாறப்பட்டன. ஆனால், விஜய் தன்னுடைய தவறுக்காக வருந்துவதாக தெரியவில்லை. அதற்கு பதிலாக என் செலவுக்கு கொடுத்து வந்த பணத்தை குறைத்தார். மேலும், சுதந்திரமாக வெளியே சென்று வருவதை தடுத்தார்.

விஜய்யின் இந்த செயல்களால் நான் மேலும் அவமதிக்கப்பட்டேன். அவரது நடத்தைகள் பொருளாதார ஆதிக்கத்தையும், தான்தான் பெரிய ஆள் என்ற மனப்பான்மையையும் பிரதிபலித்தன. தேவைப்பட்டால், விஜய்க்கு அனுப்பிய கடிதங்கள் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதி கோருகிறேன். தற்போது எங்களுக்கு இடையேயான திருமண உறவு பெயரளவில் மட்டுமே உள்ளது. முற்றிலும் சிதைந்துள்ள திருமண உறவை இனி மீட்க இயலாத நிலை உள்ளது. தொடர் மன வேதனை, அவமானம் மற்றும் துன்பமாக மாறிய திருமண உறவில் இனியும் என்னால் தொடர முடியாது.

விஜய்யின் கள்ள உறவால் தொடர்ச்சியாக பொது வெளியிலும் சமூக ஊடகங்களிலும் அவமானத்திற்கு ஆளான போதிலும் அவருக்கு உள்ள நற்பெயர் மற்றும் புகழைக் கருத்தில் கொண்டு இந்த பிரச்னையை சுமூகமாக தீர்க்க உண்மையான மற்றும் நேர்மையான முயற்சிகளை மேற்கொண்டேன். கடைசியாக விஜய்யுடன் தனிப்பட்ட முறையில் பேசி இருவரின் நன்மதிப்புக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல் கவுரவமாக பிரிந்து வாழ முயற்சி செய்தேன். இதற்காக இரு முறை அவருடன் பேசினேன். கடைசியாக கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி அவருடன் பேசினேன்.

ஆனால், அப்போதும், இருவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சுமுக தீர்வு ஏற்படவில்லை. இதனால், வேறு வழியின்றி இந்த விவகாரத்து மனுவை தாக்கல் செய்கிறேன். விஜய்க்கும் அந்த நடிகைக்கும் இருக்கும் கள்ள உறவு பற்றி தெரியவந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் முதல் நான் தொடர்ந்து மன உளைச்சலுக்கும், பொது வெளியில் அவமானத்துக்கும் ஆளாகி உள்ளேன். விஜய்க்கும் தனக்கும் உள்ள தொடர்பு குறித்த பதிவுகளை சமூகவலைதளங்களில் அந்த நடிகை தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். ஆனால், அந்த பதிவுகளை விஜய் மறுக்கவில்லை.

அதே நேரத்தில் அந்த நடிகையுடனான கள்ள உறவை இன்றுவரை தொடர்கிறார். என்னை மனரீதியாக கொடுமைப்படுத்தி, ஒதுக்கி, பிரிந்து வாழ்கிறார். எனவே, சென்னை எழும்பூர் ராஜா முத்தையா மன்றத்தில் கடந்த 1999 ஆகஸ்ட் 25ம் தேதி எனக்கும் விஜய்க்கும் நடந்த திருமணத்தை 1954ம் ஆண்டின் சிறப்பு திருமணச் சட்ட பிரிவுகளின் கீழ் ரத்து செய்து விவாகரத்து வழங்க வேண்டும்.

இந்த மனு மீதான விசாரணை முடிந்து உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை, நீலாங்கரையில் உள்ள இல்லத்திலோ அல்லது அதற்கு இணையான விஜய்யின் அந்தஸ்துக்கு உகந்த வேறொரு வீட்டிலோ என்னை தங்க வைக்குமாறு உத்தரவிட வேண்டும். அவரது வருமானம், சமூக அந்தஸ்தை கருத்தில் கொண்டு நேர்மையான மற்றும் நியாயமான, நிரந்தர ஜீவனாம்சத்தை அளிக்க என் கணவரான விஜய்க்கு உத்தரவிட வேண்டுகிறேன். வழக்கு செலவுகள் முழுமையையும் விஜய் தரவும் உத்தரவிட வேண்டும்.

நான், என் குழந்தைகள், விஜய் ஆகியோரின் மதிப்பு, மரியாதையை பாதுகாக்கும் வகையில் இந்த வழக்கின் விசாரணையை முழுமையாக ரகசியமாக நடத்தவேண்டும். இல்லையென்றால் நானும் எனது குடும்பத்தினரும் மேலும் அவமானத்திற்கும் மனவேதனைக்கும் ஆளாவோம். இவ்வாறு மனுவில் சங்கீதா குறிபபிட்டுள்ளார்.

இந்த மனு செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி டி.சந்திரசேகரன் முன்பு கடந்த 24ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சங்கீதா சார்பில் வழக்கறிஞர் பி.மஞ்சுளா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, விவாகரத்து வழக்கு என்பதால் வழக்கை குடும்பநல நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வதாகவும் விசாரணையை ஏப்ரல் 20ம் தேதிக்கு பட்டியலிட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டள்ளது.

* நடிகர் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் கடந்த 1998ல் லண்டனில் திருமணம் பதிவு செய்யப்பட்டு திருமணம் தொடர்பான சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் 1999 ஆகஸ்ட் 25ம் தேதி சென்னையில் இந்து திருமண சட்டத்தின்படி திருமணம் நடந்தது.

* விஜய், சங்கீதா திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றிருந்தாலும் விஜய் கிறிஸ்தவர் என்பதால் சிறப்பு திருமண சட்டத்தின்கீழ் சங்கீதா விவாரத்து கோரி வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

* குழந்தைகளின் படிப்பு மற்றும் குடும்பத்தின்மீது வைத்துள்ள மதிப்பு காரணமாக விஜய்யின் நடத்தையை கண்டிக்கவில்லை.

* கடந்த 2021 செப்டம்பர் மற்றும் 2022 பிப்ரவரியில் வழக்கறிஞர் மூலம் பிரச்னையை சுமுகமாக தீர்க்க முடிவு செய்து விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை.

* வழக்கு விசாரணைக்கு தேவைப்பட்டால் அந்த நடிகையையும் வழக்கில் சேர்க்க அனுமதிக்க வேண்டும்.

* தனது செயல்களால் என்னை கைவிட்ட அவர் ஒரே வீட்டில் இருவரும் தனித்தனியாக வாழும் நிலைக்கு என்னை தள்ளினார்.

Related Stories: