ஒன்றிய பாஜக அரசு மதுபான கொள்கை வழக்கின் தீர்ப்புக்காக வெட்கப்பட வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட அனைவரையும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை சிபிஐ சமர்ப்பிக்கத் தவறிவிட்டதால் வழக்கில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். “நான் நேர்மையானவன் என்பதை நீதிமன்றம் நிரூபித்துள்ளது. உண்மை வென்றது” என மதுபான கொள்கை வழக்கில் இருந்து விடுதலையான அரவிந்த் கெஜ்ரிவால் பத்திரிகையாளர்களின் முன்பு உடைந்து அழுதபடி பேட்டியளித்தார்.

கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் ஒன்றிய பாஜக அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுபான கொள்கை வழக்கில் இருந்து கெஜ்ரிவால், சிசோடியா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்ட நிலையில், உண்மையை உரக்க பேச வைத்த மரியாதைக்குரிய நண்பர் கெஜ்ரிவால் மற்றும் சிசோடியாவுக்கு வாழ்த்து முதல்வர் தெரிவித்தார். ஒன்றிய பாஜக அரசு குறுகிய அரசியல் லாபத்துக்காக விசாரணை அமைப்புகளின் நம்பகத்தன்மையை அடகு வைக்கக் கூடாது என்றும் ஒன்றிய பாஜக அரசு மதுபான கொள்கை வழக்கின் தீர்ப்புக்காக வெட்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் காட்டம் தெரிவித்தார்.

இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள பதிவில் எங்களின் சோதனை காலத்தில் எப்போதும் துணை நிற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மிக்க நன்றி என அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: