திருப்புவனம்,பிப்.3: திருப்புவனம் வட்டாரத்தில் அரசு நெல் கொள்முதல் மையம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. விவசாயிகளின் கோரிக்கையையேற்று நேற்று கொள்முதல் மையம் செயல் படத்துவங்கியது.திருப்புவனம் வட்டாரத்தில் சுமார் 4 ஆயிரம் எக்டேரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. என்எல்ஆர், கர்நாடக பொன்னி, கல்சர் பொன்னி, கோ 50 உள்ளிட்ட நெல் ரகங்களை பயிரிட்டுள்ளனர். வழக்கமாக ஜனவரி முதல் வாரத்தில் நெல் கொள்முதல் மையங்கள் செயல்பட தொடங்கும், தொடர் மழை காரணமாக அறுவடை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் நெல் கொள்முதல் மையங்கள் பொங்கல் கழித்து தொடங்கப்பட்டுள்ளது. திருப்புவனத்தில் நெல் கொள்முதல் மையத்திற்கு என பேரூராட்சி சார்பில் கடந்த 2010ம் ஆண்டு 6 லட்சம் ரூபாய் செலவில் விவசாயிகளுடன் இணைந்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. திருப்புவனத்தை சுற்றியுள்ள 30 கிராம விவசாயிகள் இந்த மையம் மூலம் பயனடைகின்றனர்.