*எம்எல்ஏ வழங்கினார்
கடவூர் : கடவூர் வடக்கு ஒன்றிய பகுதிகளில் உள்ள காணியாளம்பட்டி மற்றும் பி.உடையாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 309 மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள்யை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி வழங்கி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.கரூர் மாவட்டம் கடவூர் வடக்கு ஒன்றிய பகுதிகளில் பள்ளிக் கல்வித்துறை சார்பாக பள்ளி மாணவ மாணவியர்களுக்கான தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி தனித்தனியே நடந்தது.
தரகம்பட்டி அருகே உள்ள காணியாளம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ப்ளோரா ராணி தலைமை வகித்தார். கடவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி கலந்து கொண்டு 160 மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா ைசக்கிள் வழங்கி பேசினார்.விழாவில் அவர் பேசியதாவது:
தலைசிறந்த ஆசிரியர்களை கொண்டு பாடம் எடுத்து வருவதால் இன்று தமிழ்நாட்டின் அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் இந்தியா உள்பட உலக நாடுகள் வரை தலைசிறந்து விளங்கி வருகின்றனர். ஆகவே அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல, அது ஒரு பெருமையின் அடையாளமாக நமது தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றிக்கொண்டு வருகிறார்.
காலை உணவு திட்டம், தமிழ் புதல்வன், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம் என்று கல்விக்காக நமது முதல்வர் சிறப்பான திட்டங்களை அளித்து வருவதால் இன்று பள்ளியில் இடை நிற்றலே இல்லாத மாநிலமாக திகழ்ந்து வருவதோடு, அனைவரும் கல்விக்கு முக்கியத்துவம் அறிந்து பயின்று வருகின்றனர். ஆகவே சைக்கிள்களை பயன்படுத்தி அனைவரும் நன்றாக பயின்று சாதனைகள் படைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய பொருளாளர் சின்னத்துரை, இளைஞரணி அமைப்பாளர் சிவக்குமார் உள்பட பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், எஸ்எம்எசி நிர்வாகிகள் உள்பட ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல் பண்ணப்பட்டி ஊராட்சி பி.உடையாபட்டியில் உள்ள அரசு உதவி பெறும் மாரிஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜான்ஷன் ஞானசேகர், உதவி தலைமை ஆசிரியர் மரிய அருள்பிரகாசம் ஆகியோர் தலைமையில் நடந்தது.
கடவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி கலந்து கொண்டு 149 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
