கரூர், பிப். 5: கரூர் மாவட்டத்தில் உள்ள 234 மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.1.09 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை செந்தில் பாலாஜி எம்எல்ஏ வழங்கினார். கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் வரவேற்றார்.
நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வி.செந்தில் பாலாஜி எம்எல்ஏ 234 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு, ரூ.1.09 கோடி மதிப்பில், பெட்ரோல் ஸ்கூட்டர், ஸ்மார்ட் போன், பேட்டரி வீல் சேர், தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் இளங்கோ, சிவகாம சுந்தரி, மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் மண்டல தலைவர்கள் எஸ்.பி.கனகராஜ், ஆர்.எஸ்.ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
