நாடாளுமன்ற துளிகள்…

* ரூ.2,930கோடி எதிரி சொத்துக்கள் விற்பனை
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்,‘‘எதிரிச் சொத்துக்களை அகற்றுதல் மற்றும் பணமாக்குதல் ஆகியவை 1968ம் ஆண்டு எதிரிச் சட்டம் மற்றும் அதில் வகுக்கப்பட்ட விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி செய்யப்படுகின்றன. 2026ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி வரை ரூ.2,930 கோடி மதிப்புள்ள எதிரிகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

* சைபர் குற்றவாளிகளிடம் இருந்து ரூ.8,189 கோடி பாதுகாப்பு
மாநிலங்களவையில் உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்,‘‘கடந்த 2021ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை குடிமக்கள் நிதி சைபர் மோசடி அறிக்கை மற்றும் மேலாண்மை அமைப்பு மூலமாக ரூ.23.61லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளன. 2025ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை பெறப்பட்ட 23.61லட்சத்திற்கும் மேற்பட்ட புகார்களில் ரூ.8,189கோடிக்கும் அதிகமான நிதித் தொகை காப்பாற்றப்பட்டுள்ளது” என்றார்.

* ஏஐ தவறான பயன்பாட்டினால் ஆபத்து
மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தின்போது பீகாரை சேர்ந்த காங்கிரஸ் எம்பி அகிலேஷ் பிரசாத் சிங்,‘‘தவறான தகவல்களைப் பரப்புவதற்கும், குற்றங்களை எளிதாக்குவதற்கும் டீப்ஃபேக்குகள் மற்றும் ஏஐ தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவது கவலை அளிக்கின்றது. இணையக் குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

* அடுத்த மாதம் நக்சலிசம் முடிவுக்கு வரும்
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ,‘‘இடதுசாரி தீவிரவாதம் அல்லது இந்தியாவில் பொதுவாகக் குறிப்பிடப்படும் நக்சல் பிரச்னை 1968ம் ஆண்டு முதல் இருந்து வருகின்றது. இது குறித்த தேசியக் கொள்கை இல்லாததால் இது பல தசாப்தங்களாக நீடித்து வந்தது. 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியா நக்சலிசத்தில் இருந்து விடுபடும். பிரதமர் மோடி அரசின் பூஜ்ய சகிப்புத் தன்மை கொள்கை மற்றும் தலைமையின் கீழ் நக்சலிசம் விரைவில் ஒழிக்கப்பட உள்ளது” என்று தெரிவித்தார்.

Related Stories: