தேர்வு குறித்த விவாதம் மாணவர்களுடன் மோடி பேச்சு பிப்.6ல் ஒளிபரப்பு

புதுடெல்லி: இந்த ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி நடத்திய கலந்துரையாடல் பிப்.6ஆம் தேதி ஒளிபரப்பப்படுகிறது. இந்த ஆண்டு, குஜராத்தில் உள்ள தேவ்மோக்ரா, தமிழ்நாட்டில் கோவை, சட்டீஸ்கரில் உள்ள ராய்ப்பூர், அசாமில் உள்ள கவுஹாத்தி மற்றும் டெல்லியில் உள்ள மாணவர்கள் பிரதமரின் இல்லத்திற்கு சென்று தேர்வு குறித்த விவாதத்தில் பங்கேற்றனர். இதுபற்றி பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில்,’ இளம் நண்பர்களுடன் தொடர்புகொள்வதும், மன அழுத்தமில்லாத தேர்வுகள் மற்றும் பல விஷயங்களைப் பற்றி விவாதிப்பதும் புத்துணர்ச்சியூட்டுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் துளிகள்
* சுகாதார காப்பீட்டில் 96 லட்சம் மூத்த குடிமக்கள் பதிவு
மாநிலங்களவையில் சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் கூறுகையில், ‘‘ஒரு குடும்பத்துக்கு ரூ.5லட்சம் சுகாதார காப்பீட்டை வழங்கும் திட்டமானது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபரில் ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை மூலம் சமூக பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் 4.5 கோடி குடும்பங்களை சேர்ந்த 70வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 6கோடி மூத்த குடிமக்களை உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது. 2025ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 96லட்சம் ஆயுஷ்மான் வந்தனா அட்டை பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

* 7400 நக்சல்கள் கைது
மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய், 2019ம் ஆண்டு முதல் 7400க்கும் மேற்பட்ட நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 5800 பேர் சரணடைந்துள்ளனர். இடதுசாரி தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் 2010ல் 1936ஆக இருந்தது. 2025ம் ஆண்டு 234ஆக குறைந்து 88சதவீதம் சரிவடைந்துள்ளது. கடந்த 2025ம் ஆண்டு பாதுகாப்பு படைகள் 364 நக்சல்களை சுட்டுக்கொன்றனர். 1022 பேரைக் கைது செய்தனர். 2337 நக்சல்கள் சரணடைய உதவினார்கள்” என்று தெரிவித்தார்.

* போலி ரேபிஸ் தடுப்பூசி-ஒருவர் கைது
மாநிலங்களவையில் சுகாதாரத் துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் கூறுகையில், ‘‘இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட்டின் ஒரு பிரிவான ஹியூமன் பயோலஜிக்கல் இன்ஸ்டிடியூட்டிடம் இருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் போலி ரேபிஸ் தடுப்பூசி புழக்கத்தில் இருந்தது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்றார்.

* யுபிஐ பரிவர்த்தனை ரூ.230லட்சம் கோடி
மாநிலங்களவையில் பேசிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறுகையில், யுபிஐ உள்நாட்டு பரிவர்த்தனைகளை பொறுத்தவரை 2025-2026ம் ஆண்டில் டிசம்பர் வரை மொத்தம் ரூ.230லட்சம் கோடி மதிப்பு பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: