புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, சிவராஜ் சிங் சவுகான், ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா, பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ், சர்பானந்த சோனாவோல், மனோகர் லால் கட்டார், ஹர்தீப் சிங் பூரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் உள்ளிட்டோர் கலந்து கொண்ட உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், மேற்கு ஆசியா போரைத் தொடர்ந்து நிலவும் தற்போதைய உலகளாவிய நிலைமை குறித்தும், நுகர்வோர் மற்றும் தொழில்துறை நலன்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மாறிவரும் மேற்கு ஆசியா சூழலை கருத்தில் கொண்டு கச்சா எண்ணெய், எரிவாயு, பெட்ரோலியப் பொருட்கள், மின்சாரம் மற்றும் உரத்துறைகள் தொடர்பான நிலைமை குறித்து பிரதமர் மோடி தகவல்களை கேட்டறிந்தார்.
அப்போது பெட்ரோலிய பொருட்கள் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்ய அரசு முன்கூட்டியே நடவடிக்கைகள் எடுத்து வருவதாக ஒன்றிய அமைச்சர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தடையற்ற விநியோகம், நிலையான தளவாடங்கள் மற்றும் நாடு முழுவதும் விநியோகத்தை உறுதி செய்வதே இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மேற்கு ஆசியா போரால் சர்வதேச விநியோக சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளைச் சரிசெய்ய தனது அரசு அயராது உழைத்து வருவதாக பிரதமர் மோடி ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
