திருத்தணி: திருத்தணி பேருந்து நிலையத்தில் இருக்கை வசதி உள்பட அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, அரக்கோணம், திருவள்ளூர் மற்றும் ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும், திருத்தணி மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கும் பேருந்துகள் செல்கின்றன. இதனால் இந்த பஸ் நிலையத்தில் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். இந்நிலையில், திருத்தணி பேருந்து நிலையத்தில் பயணிகளின் வருகைக்கு ஏற்ப அடிப்படை வசதிகளான கழிவறை, குடிநீர் வசதி உள்பட எதுவும் சரியாக இல்லை. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். குறிப்பாக பெண்கள் கடும் அவதியுறுகின்றனர். மேலும் பஸ் நிலையத்தில் உள்ள பெரும்பாலான இருக்கைகள் உடைந்துவிட்டதால் பஸ்சுக்காக மணிக்கணக்கில் பயணிகள் கால்கடுக்க நிற்கின்றனர்.