செங்கல்பட்டு: கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவர்கள் கூலி வேலைக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க உடனடியாக பள்ளிகளை திறக்க வேண்டும் என மாணவர் சங்கம் வலியுறுத்துகிறது. இதுகுறித்து, இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் சுந்தர், மாவட்ட செயலாளார் தமிழ்பாரதி ஆகியோர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர்களிடம், கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. கொரோனா தொற்றால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்த பிறகும், இதுவரை பள்ளி , கல்லூரிகள் திறக்கவில்லை. இதனால் கிராமபுற மாணவர்கள், தங்களது குடும்பத்தின் நெருக்கடியின் காரணமாக வேறு வழியின்றி பல்வேறு கூலி வேலைக்கு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதில் மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலம் கேள்விக் குறியாகிறது. பள்ளி, கல்லூரிகளை உடனடியாக திறந்து மாணவர்கள் பாதுகாப்புடன் கல்வி பயில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.