திருமலை: காதலுக்கு தடையாக இருந்த காதலனின் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், கேதேபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ்யாதவ் (40). இவரது மனைவி மம்தா (35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நாகேஷூக்கு திருமணத்திற்கு முன்பே அதே கிராமத்தைச் சேர்ந்த சுஜாதா (35) என்ற பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது. திருமணத்திற்கு பிறகும் இவர்களது தொடர்பு நீடித்துள்ளது. இதையறிந்த பெற்றோர் இருவரையும் கண்டித்துள்ளனர். இதனால் நாகேஷூம், சுஜாதாவும் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சுஜாதா, தங்களது காதலுக்கு தடையாக இருக்கும் மம்தாவை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக சுஜாதா தனது வீட்டில் இருந்து பெட்ரோல், கத்தி மற்றும் மிளகாய் பொடியை ஒரு பையில் எடுத்துக்கொண்டு நாகேஷ் வீட்டிற்கு நேற்று சென்றார். அப்போது நாகேஷின் மனைவி மம்தா வீட்டின் முன் அமர்ந்து தனது 6 மாத குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்துள்ளார். அப்போது சுஜாதா, மம்தா மீது திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். தீ மம்தா உடல் முழுவதும் பரவிய நிலையில் அலறியபடி, தனது குழந்தை மீது தீப்பிடிக்காமல் இருக்க அருகே தூக்கி வீசினார். சிறிது நேரத்தில் உடல் முழுவதும் தீ பரவிய நிலையத்தில் மம்தா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். குழந்தைக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
இதையடுத்து சுஜாதா காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையை மீட்டு நல்கொண்டா அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக ஐதராபாத் மருத்துவமனைக்கு குழந்தையை மாற்றினர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மம்தா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சுஜாதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
