செங்கல்பட்டு: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலமாக சிறு மற்றும் பெரிய நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது என செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை ஒருங்கிணைந்து செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரியில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டுமிடப்பட்டுள்ளது. இந்த முகாமில் கலந்து கொண்டு, தகுதியான ஆட்களை தேர்வு செய்வதற்காக, 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. 8, 10, 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றோர், பட்டப்படிப்பு, டிப்ளமோ, இன்ஜினியரிங் முடித்தோர் இம்முகாமில் கலந்து கொண்டு, பயன்பெறலாம். இதில் கலந்து கொள்ளும் நிறுவனங்களுக்கும், வேலை தேடுபவர்களுக்கும் அனுமதி முற்றிலும் இலவசம்.