நாகை, ஜன. 29: மழையால் சேதமடைந்த நாகை- தஞ்சை சாலையை சீரமைக்காத நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து நாகை கோட்டை வாசல்படி மின்சார வாரிய அலுவலகம் எதிரே மனித நேய மக்கள் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதனால் 40 பேரை போலீசார் கைது செய்தனர். மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாகை- தஞ்சை தேசிய நெடுஞ்சாலை மழையால் சேதமடைந்ததால் கடந்த 3 மாதங்களாக அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் பல அமைப்புகள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நாகை கோட்டை வாசல்படி மின்சார வாரிய அலுவலகம் எதிரே மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜபருல்லா தலைமை வகித்தார்.