பொது இடங்களில் அனுமதியின்றி மரக்கிளைகளை வெட்டிய 6 நபர்களுக்கு ரூ.1.75 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சி பொது இடங்களில் அனுமதியின்றி மரங்கள் மற்றும் மரக்கிளைகளை வெட்டிய 6 நபர்களுக்கு ரூ.1.75 லட்சத்தை மாநகராட்சி அபராதமாக விதித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பசுமைப் பரப்பினை அதிகரித்திடும் வகையில் பல்வகை மரக்கன்றுகள் நடப்பட்டும், குறுங்காடுகள் உருவாக்கப்பட்டும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், ஏற்கனவே பெருநகர சென்னை மாநகராட்சி பொது இடங்களில் உள்ள மரங்களைப் பாதுகாத்திடும் வகையில் பொது இடங்களில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அனுமதியின்றி வெட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர் நடவடிக்கையாக, கடந்த 22ம் தேதி ஒருநாள் மட்டும் பொது இடங்களில் அனுமதியின்றி மரங்களை வெட்டிய நபருக்கு ரூ.1 லட்சம் அபராதமும், மரக்கிளைகளை வெட்டிய 5 நபர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.75 ஆயிரம் அபராதம் என மொத்தம் ரூ.1.75 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் மரங்களின் கிளைகளை அகற்றுதல், காய்ந்து போன மரங்களை அகற்றுதல், மாற்று இடங்களில் மரங்களை நடுதல் மற்றும் மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட சேவைகளை பொதுமக்கள் எளிமையாக பயன்படுத்துவதற்கும் காலதாமதத்தை குறைத்து துரித நடவடிக்கை மேற்கொள்ளும் வகையிலும், மரங்கள் அகற்றுதல் மற்றும் மரக்கிளைகள் அகற்றுதல் உள்ளிட்ட சேவைகள் வனத்துறை மூலமாக நேரடியாக விண்ணப்பித்த நிலையை மாற்றி, 12.01.2026 முதல் அனைத்து விண்ணப்பதாரர்களும், விண்ணப்பங்களை பெருநகர சென்னை மாநகராட்சியின்https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளத்தில் பசுமைக் குழு போர்ட்டல் மற்றும் நம்ம சென்னை செயலி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பெறப்பட்ட விண்ணப்பங்களை பெருநகர சென்னை மாநகராட்சி பூங்கா கண்காணிப்பாளர்/மேற்பார்வையாளர், சமூக ஆர்வலர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மூலமாக களஆய்வு மேற்கொள்ளப்பட்டு, களஆய்வின் ஆய்வறிக்கை பசுமைக் குழுவிற்கு அனுப்பப்பட்டு, அதன் விவரம் விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தியாக வாயிலாக அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், மாநகராட்சியின் இணையதளத்தின் வாயிலாகவும் விண்ணப்பதாரர்கள் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உரிய அனுமதியின்றி பொது இடங்களில் மரங்களை வெட்டுபவர்களுக்கு ரூபாய் 1 இலட்சம் அபராதமும், மரக்கிளைகளை வெட்டுதல், மரத்தில் ஆணி அடித்து விளம்பரப் பலகைகள் பொருத்துதல், மரங்களைச் சுற்றி விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்டவற்றிற்கு ரூபாய் 15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் பொது இடங்களில் உள்ள மரங்கள், மரக்கிளைகளை வெட்டுதல் தொடர்பாக மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறை எண் 1913 தொலைபேசி வாயிலாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். எனவே, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மரங்கள் அகற்றுதல் மரக்கிளைகள் அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் மற்றும் நம்ம செயலில் மூலமாக பொதுமக்கள் விண்ணப்பித்திடவும், பொது இடங்களில் அனுமதியின்றி மரங்கள் மற்றும் மரக்கிளைகளை வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

Related Stories: