ஓசூர், ஜன.29: ஓசூரில் நிதி நிறுவனத்தில் ₹12 கோடி நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைதான 7 பேரை, பெங்களூருவுக்கு போலீசார் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 22ம் தேதி, வட மாநில கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து, துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டி அங்கிருந்த ₹12 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இதுதொடர்பாக மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரூப்சிங் பாகல், சங்கர்சிங் பாகல், பவன்குமார் விஸ்கர்மா, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தைச் சேர்ந்த பபேந்தர் மஞ்சி, விவேக்மண்டல், உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் டேக்ராம், ராஜீவ்குமார் ஆகிய 7 பேரை தெலங்கானா மாநிலத்தில் 23ம் தேதி போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 25 கிலோ நகைகள், 7 துப்பாக்கிகள், 97 தோட்டாக்கள், கார் மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டன.