சென்னை: வருமானத்தை மறைத்ததாக கூறி ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததை எதிர்த்து நடிகர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. கடந்த 2015-16ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என்று கண்டறிந்தது. இதை தொடர்ந்து, வருமானத்தை மறைத்ததற்கான ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, தனக்கு அபராதம் விதித்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், விஜய் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நேற்று நடந்தது.
அப்போது, விஜய் தரப்பில், சட்டப்படி அபராத உத்தரவை 2019 ஜூன் 30ம் தேதிக்கு முன்பே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால், காலதாமதமாக 2022ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, வருமான வரித்துறையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்று வாதிடப்பட்டது. வருமான வரித்துறை தரப்பில், வருமான வரி மதிப்பீட்டை எதிர்த்த அப்பீல் முடிந்த பின்னர், ஆறு மாத கால அவகாசத்துக்குள்ளேயே அபராத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வருமான வரிச்சட்டப்படி நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்து சரிதான். எனவே, விஜய் தாக்கல் மனுவை வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
