மதுரை: அகில இந்திய பார்வர்ட் பிளாக் தினகரன் பிரிவு மாநில பொதுச்செயலாளர் எஸ்.தினகரன் கூறி இருப்பதாவது: சமீப காலம் வரை எடப்பாடி பழனிசாமியை எவ்வளவு இழிவாக பேச முடியுமோ, அவ்வளவு கேவலமாக பேசியவர் டிடிவி.தினகரன். துரோகி என்றும், துரோகத்திற்கு நோபல் பரிசு வழங்குவது என்றால் பழனிசாமிக்கு வழங்கலாம் என்றும் பேசினார். இன்றைக்கு அவர் பின்னால், அவர் சார்ந்த சமுதாயம் இருக்கிறது என்ற மாயத் தோற்றத்தை நம்பி பாஜ மற்றும் அதிமுக கூட்டணியில் சேர்த்து இருக்கிறார்கள்.
நிச்சயமாக தென்மாவட்டங்களில் அவரது சமூதாயத்தினர், டிடிவி.தினகரன் பின்னால் இல்லை என்பது தான் உண்மை, யதார்த்தம். ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ரூ.11 கோடி செலவில் திருமண மண்டபம் அமைக்க உத்தரவு பிறப்பித்தவர். மேலும், தேவரின் சீடரான மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில் ரூ.7 கோடி செலவில் மணிமண்டபம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆகவே டிடிவி.தினகரன் எனும் மண் குதிரையை நம்பியுள்ள தே.ஜ. கூட்டணி தோல்வி அடைவது உறுதி.இவ்வாறு தெரிவித்துள்ளார்.
