அலெப்போ: சிரியா அரசு படைகள் மற்றும் குர்தீஷ் ஜனநாயக படைகளுக்கும் இடையே நேற்று துப்பாக்கிச் சூடு நடந்தது. சிரியாவில் அரசுக்கும் எஸ்டிஎப்க்கும் இடையே ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை தேசிய ராணுவத்துடன் இணைப்பது குறித்த பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து முட்டுக்கட்டை நீடித்து வருகின்றது. இதற்கான கடந்த ஆண்டு மார்ச்சில் ஒப்பந்தம் ஏற்பட்டாலும் அதை அமல்படுத்துவதற்காக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இதன் காரணமாக குர்திஷ் பகுதிகளில் அரசு படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றது. டெய்ர்ஹெஃபருக்கு தெற்கே கிராமத்தின் மீது டிரோன்கள், பீரங்கிகள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி அரசு படைகள் தாக்குதல் நடத்தின. கிழக்கு அலெப்போவில் சிரியா அரசு படைகளுக்கும் குர்திஷ் சிரியா ஜனநாயக படைகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
