குளத்தில் மூழ்கி குழந்தை பலி

திருக்கோவிலூர், ஜன. 27:  கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சந்தப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அபுபக்கர். இவரது மனைவி மும்தாஜ்(30). இவர்களுக்கு திருமணமாகி  சையத்அமிது(8), சையது தமீம்(7) என இரண்டு குழந்தைகள் உள்ளது.

அபுபக்கர் கடந்த 3 வருடத்திற்கு முன் சாலை விபத்தில் இறந்துவிட்டார். இந்நிலையில் நேற்று சந்தப்பேட்டை நல்லதண்ணீர் குளம் அருகில் உள்ள வீட்டில் வீட்டு வேலை செய்ய மும்தாஜ் சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகள் அங்குள்ள குளத்தின் அருகே விளையாடி கொண்டிருந்தது. அப்போது குழந்தைகள் குளத்தின் படிக்கட்டில் நின்று வேடிக்கை பார்த்தபோது கால் தவறி இரண்டு குழந்தைகளும் குளத்தில் விழுந்து மூழ்கியது.

குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டவுடன் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து சையத்அமீதை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தமீம் (7) குளத்தில் சடலமாக மிதந்தார். சடலத்தை பொதுமக்கள் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: