தொண்டி, ஜன.27: ராமநாதபுரம் மாவட்டம் கடல் சார்ந்த பகுதியாக இருப்பதால் இங்கு பிரதான தொழிலாக மீன்பிடி தொழில் உள்ளது. மாவட்டம் முழுவதும் பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் மீன்பிடி தொழில் மூலம் நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கானோர் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மறைமுகமாகவும் ஏராளமானோர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். மாவட்டத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் மீனவர்களின் வாழ்வில் பாதுகாப்பு என்பது கேள்வி குறியாகவே உள்ளது. கடந்த சில வருடங்களாக இலங்கை கடற்படை அத்து மீறிய செயலில் ஈடுபட்டு வருகின்றது. படகுகள் பறிமுதல், மீனவர்கள் கைது, விரட்டி அடிப்பது என்று தொடர்ந்து, மீனவர்களை கொலை செய்யவும் துணிந்து விட்டனர். இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது.