சத்தியமங்கலம், ஜன. 26: பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டி.எம்.சி. கொள்ளளவும் கொண்டதாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான, நீலகிரி மாவட்ட பகுதிகளில் பெய்யும் மழையே அணையின் நீர்வரத்துக்கு பிரதானமாகும். நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால், நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் கடந்த ஜனவரி 7ம் தேதி 105 அடியை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து இரண்டாம் போக பாசனத்திற்கு கீழ்பவானி வாய்க்காலில் சுழற்ச்சி முறையில் தண்ணீர் திறக்கப்பட்டது. நீர் திறப்பு நாளன்று, அணையின் நீர்மட்டம், முழு கொள்ளளவான 105 அடி, நீர் இருப்பு 24.9 டி.எம்.சி.யாகவும் இருந்தது.