பாடாலூர், ஜன.3: செட்டிகுளம் முருகன் கோயில் உண்டியலில் ரூ.9.62 லட்சம் காணிக்கையாக கிடைத்தது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி கோயில்கள் உள்ளது. இக்கோயில்களில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி மலை மீதுள்ள தண்டாயுதபாணி கோயில் வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
பெரம்பலூர் அறநிலையத்துறை உதவி ஆணையர் உமா தலைமையிலும், செட்டிகுளம் கோயில் செயல் அலுவலர் ஹேமாவதி, அறநிலையத்துறை ஆய்வாளர் சுமதி ஆகியோர் முன்னிலையிலும் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.
இந்த உண்டியல் எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள், ஐயப்ப சேவா சங்கத்தினர், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். உண்டியலில் பக்தர்கள் ரூ.9,62,609 காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 10.7 கிராம் தங்கம், 530 கிராம் வெள்ளி கிடைத்தது. இவை அனைத்தும் கோயில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
