திருமானூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

அரியலூர், ஜன.3: அரியலூர் மாவட்டம் திருமானூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இங்கு விவசாய கடன், நகைக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடன் சங்கத்தில் 2,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் கணக்கு வைத்து கடன் பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்த கடன் சங்கத்தில் பணியில் இருந்த செயலாளர் ராஜசெல்லம் அண்மையில் வேறு வங்கிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

அனைத்து கோப்புகளிலும் கையெழுத்திட்ட அவர், மாற்றம் செய்யப்பட்ட கடன் சங்க அலுவலகத்துக்கு செல்லாமல் மீண்டும் இங்கேயே வந்து பணியில் இருந்ததால், பணி முழுவதும் கடந்த சில தினங்களாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து திருமானூர் கடன் சங்க அலுவலகத்துக்கு வந்த புதிய செயலாளர் மருத்துவ விடுப்பெடுத்து சென்றுவிட்டார்.

இதனால் மகளிர் சுய உதவிக்குழுவினர் பணம் செலுத்துவது, விவசாயிகள் விவசாய கடன் பெறுவது உள்ளிட்ட அனைத்து பணிகளும் தாமதமாகி உள்ளது. நேற்று வங்கியை திறக்காமல் ராஜசெல்லம் இருந்தார். ஆத்திரமடைந்த விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்க அலுவலத்தை முற்றுகையிட்டனர். மேலும், புதிய செயலாளரை பணிக்கு திரும்ப வேண்டும். பழைய செயலாளர் வெளியே செல்ல வேண்டும்.

கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தினர். தகவலறிந்த கூட்டுறவுத்துறை மாவட்ட பதிவாளர் இம்தியாஸ் உள்ளிட்ட அலுவலர்கள், ராஜசெல்லம் இருசக்கர வாகனத்திலிருந்து வங்கி சாவியை எடுத்து திறந்தனர். இதையடுத்து வங்கிப்பணிகள் தொடங்கின. இதனால் திருமானூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

Related Stories: