பொன்னமராவதி, ஜன. 24: தமிழகத்தில் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென பொன்னமராவதியில் நடந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசினார். பொன்னமராவதியில் வட்டார நகர காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. வட்டார தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். நகர தலைவர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் ராம.சுப்புராம், புஷ்பராஜ் ஆகியோர் பேசினர். இதில் பங்கேற்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: சட்டமன்ற தேர்தல் கலைகட்டி விட்டது. கோவிட் தடுப்பூசியை தைரியமாக போட வேண்டும். எந்தவித தயக்கமின்றி இந்த ஊசியை போடலாம். 2 மாதத்துக்கு முககவசம் அணிய வேண்டும். 50 ஆண்டு அரசியலில் கூட்டணி தான் பலம். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்த கட்சிகளே ஆட்சியை பிடித்துள்ளது என்பது தமிழக வரலாறு.ஆள்பலம், அதிகார பலம், பண பலம் வைத்து செயல்படுவர்கள் நிச்சயம் தோல்வியடைவார்கள். எதிர்காலத்தை ஆழப்போவது திமுக என்பதில் ஐயமில்லை. திமுக தலைமையில் ஆட்சி அமையும் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது. 10 ஆண்டு கால அதிமுக ஆட்சிக்கும், 7 ஆண்டு முடிந்து இன்னும் 3ஆண்டுகளில் நடைபெறவுள்ள பாஜக ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.