சென்னை: கூட்டுறவு துறையின் கீழ் நியாயவிலை கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 15 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: கூட்டுறவு சங்கங்களின் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய விகிதம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அதன்படி தமிழக அரசு சார்பில் இதற்காக கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் வீரப்பன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
அந்த குழுவின் அடிப்படையில் ஜன.1ம் தேதி 2026 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய ஊதிய விகிதங்கள் அறிவிக்கப்படுகிறது. இதில் விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.8,600 முதல் ரூ.29,000 வரையிலான ஊதிய நிலை தற்போது ரூ.9,900 முதல் 39,600 வரை காலமுறை ஊதியமாக உயர்த்தப்படுகிறது. அதேபோல், தொகுப்பூதியத்தில் பணியில் சேரும் முதல் ஆண்டில் வழங்கப்படும் ரூ.6250லிருந்து ரூ.7,500 ஆக உயர்த்தப்படுகிறது. மேலும், கட்டுநர்களுக்கு ரூ.7,800 முதல் ரூ.26 ஆயிரமாக ஊதிய படி நிலை இருந்தன.
தற்போது, ரூ.9 ஆயிரத்திலிருந்து ரூ.35 ஆயிரமாக ஊதியம் உயர்த்தி வழங்கப்படுகிறது. இதில், தொகுப்பூதியத்தில் பணியில் உள்ளோருக்கு ரூ.5,500 லிருந்து ரூ.6,600 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, அரசு ஊழியர்களுக்கு எப்போது அகவிலைப்படி உயர்த்தப்படுகிறதோ, அதே விகிதத்தில் இவர்களுக்கும் உயர்வு வழங்கப்படும். பணியாளர்களின் பயணப்படி மற்றும் மருத்துவச் செலவுகளுக்கான படிகளும் கணிசமாக உயர்த்தப்படுகின்றன.
அதேபோல், 15 மற்றும் 30 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு முறையே தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை ஊதிய உயர்வுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும், பண்டிகை காலங்களில் வழங்கப்படும் முன்பணத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி ஊதிய மாற்றத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 26,020 பணியாளர்கள் நேரடி பலன் அடைவார்கள். இதில் 22,804 விற்பனையாளர்களும், 3,216 கட்டுநர்களும் அடங்குவது குறிப்பிடத்தக்கது.
