விழுப்புரம், டிச. 27: விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சியில் வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு பேரூராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இதுகுறித்து செயல் அலுவலர் ஜேம்ஸ் டி சாமி கூறுகையில், வளவனூர் பேரூராட்சி மேற்கு மற்றும் கிழக்கு பாண்டி ரோட்டில் வணிக வளாக கடைகள் 2014-15 மற்றும் 15-16ம் ஆண்டுகளில் புதிதாக கட்டி பொது ஏலம் விடப்பட்டு உயர்ந்த ஏலம் கோரிய நபர்களுக்கு இப்பேரூராட்சி மன்ற ஒப்புதலின் பேரில் குத்தகை உரிமம் வழங்கப்பட்டு 2 ஆண்டு குத்தகை வசூலிக்கப்பட்ட நிலையில் அரசாணையின்படி ஆண்டுக்கு 5 சதவீத குத்தகை உயர்வு செய்ததையும், வாடகையை குறைக்கவும் மற்றும் பேரூராட்சியின் குத்தகை நிலுவை மற்றும் நடப்பு கேட்டு அறிவிப்பு தடையாணை கோரி குத்தகைதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் 22 நபர்கள் வழக்கு தொடரப்பட்டிருந்தன. இப்பேரூராட்சி சார்பாக உரிய ஆவணங்களுடன் எதிர் உறுதி ஆவணம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் வழக்கு விசாரணையின்போது மனுதாரர்களால் கொரோனா பெருந்தொற்று காரணமாக குத்தகையை தள்ளுபடி செய்யப்பட்டதற்கு அரசாணைகளின் படி 7 மாத குத்தகை தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கில் இறுதி தீர்ப்பில் மனுதாரர்களான குத்தகைதாரர்கள் வாடகை நிலுவை தொகை முழுவதையும் செலுத்தப்பட வேண்டும் மற்றும் உரிய விதிமுறைகளை பின்பற்றுமாறு குத்தகைதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த தீர்ப்பின்படி வாடகை நிலுவையை பலமுறை அறிவிப்பு வழங்கியும் ஒவ்வொரு கடையிலும் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.60 லட்சம் வரை நிலுவை பாக்கி உள்ளது. பேரூராட்சிக்கு முக்கிய நிதி ஆதாரமே கடைகளின் வாடகையாகும். மேலும் பேரூராட்சிகளின் இயக்குனர், மாவட்ட ஆட்சியர் மற்றும் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஆகியோர் ஆய்வு கூட்டங்களில் வாடகை நிலுவையின்றி வசூலிக்க கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நிலுவை செலுத்தாத கடைகளுக்கு பேரூராட்சி பணியாளர்கள் கூட்டாக சென்று பூட்டி சீல் வைத்து வருகின்றனர். எனவே குத்தகைதாரர்கள் விரைந்து வாடகை பாக்கியை தாங்களாகவே முன்வந்து செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
