ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலையில் உறை பனி விழுந்தது. மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியதால் கடும் குளிரில் மக்கள் அவதிக்குள்ளாகினர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இறுதி முதல் நீர் பனி விழும். தொடர்ந்து நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்திற்கு மேல் உறைபனி விழத்துவங்கும். இம்முறை நவம்பர் மாதம் வரை நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வந்த நிலையில், உறைபனி விழுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக நீலகிரியில் பல்வேறு பகுதிகளிலும் உறை பனி கொட்டி வருகிறது. இன்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உறைபனி காணப்பட்டது.
குறிப்பாக, நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உறைபனி விழுந்தது. ஊட்டியில் தாவரவியல் பூங்கா, காந்தல், தலைக்குந்தா, எச்பிஎப், பைக்காரா, ஷூட்டிங் மட்டம், அவலாஞ்சி மற்றும் கிளன்மார்க்கென் போன்ற பகுதிகளில் இன்றும் உறைபனி அதிகமாக விழுந்தது. புல்வெளிகள், வாகனங்களில் உறைபனி படர்ந்து காணப்பட்டது. பனியின் காரணமாக வெப்பநிலை மிகவும் குறைந்தது. இன்று காலை ஊட்டியில் அதிகபட்சமாக 23 டிகிரி செல்சியசும் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 2 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியிருந்தது. இதனால், காலையில் கடும் குளிர் நிலவியது.
தேயிலைத் தோட்டம், மலை காய்கறி தோட்டங்களுக்கு பணிக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் குளிரால் பாதிக்கப்பட்டனர். பொதுமக்கள் பலரும் குளிரை சமாளிக்க ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்தனர். பனிப்பொழிவை காண சுற்றுலா பயணிகள் காலை நேரங்களில் தலைக்குந்தா, தாவரவியல் பூங்கா உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பனிப்பொழிவை கண்டு ரசித்தனர்.
