கைரேகை, கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் வழங்க இயலாத மூத்த குடிமக்களுக்கு கையொப்பம் வாங்கி ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும்: உணவு வழங்கல் துறை இயக்குனர் உத்தரவு

 

 

வேலூர்: கைரேகை, கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் வழங்க இயலாத மூத்த குடிமக்களுக்கு கையொப்பம் வாங்கி ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என்று உணவு வழங்கல் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாய விலைக்கடைகள் உள்ளன. இக்கடைகள் மூலம் 2.26 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், கோதுமை போன்ற உணவுப் பொருட்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்படுகிறது. இதில் 98.45 லட்சம் முன்னுரிமை பிஎச்எச் ரேஷன் கார்டுகளில் 3 கோடி உறுப்பினர்களும், 18.64 லட்சம் அந்தியோதயா ஏஏஒய் ரேஷன் கார்டுகளில் 62.88 லட்சம் பேரும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த இரண்டு பிரிவினருக்குமான அரிசி ஒதுக்கீட்டில், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு கோதுமையை ஒன்றிய அரசு தேசிய ஒதுக்கீட்டின் கீழ் இலவசமாக வழங்குகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே ரேஷன் உணவு பொருட்கள் வினியோகம் செய்யும் தாய்மானவர் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி ரேஷன் கடைஊழியர்கள் வீடுகளுக்கு சென்று, கார்டுதாரரின் கைரேகையை பதிவு செய்து பொருட்கள் வழங்குகின்றனர். தொலைதொடர்பு சிக்னல் பிரச்னையால், கைரேகை மற்றும் கண் கருவிழி சரிபார்ப்பு செய்ய முடிவதில்லை. இதனால் பொருட்கள் வழங்கப்படாமல் ரேஷன் கார்டுதாரர்களை அலைக்கழிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதற்கு தீர்வு காணும் வகையில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குனர் சிவராசு, அனைத்து மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று குடிமைப்பொருட்களை விநியோகம் செய்யப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தின் கீழ் நியாய விலை, அங்காடி பணியாளர்கள் பொது விநியோகத் திட்டப் பொருட்களை பயனாளர்களின் இல்லத்திற்கே நேரில் சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கை ரேகை சரிபார்ப்பு முறை மற்றும் கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பட்டியலிட முடியாததால் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படாமல் அலைக்கழிப்பதாக மாவட்டங்களிலிருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

எனவே இத்திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லம் தேடி அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யும்போது கைரேகை சரிபார்ப்பு முறை மற்றும் கண் கருவிழி சரிபார்ப்பு முறைகளில் வழங்க இயலாத நிலையில், ப்ராக்ஸி முறையில் பயனாளர்களுக்கு உரிய பதிவேட்டில் கையொப்பம் பெற்றுக்கொண்டு பொருட்களை வழங்க வேண்டும். இத்திட்டத்தின்கீழ் பயனாளர்களுக்கு எவ்வித சூழ்நிலையிலும் பொது விநியோகத் திட்டப் பொருட்களை விநியோகிக்காமல் அலைகழிக்கக் கூடாது என்பதை அனைத்து நியாய விலை அங்காடி பணியாளர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: