சென்னை: தர்மபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் கடன்களை திருப்பிச் செலுத்த 2007-08ம் ஆண்டு ஒன்றிய அரசு 3 கோடியே 50 லட்சம் ரூபாயை மானியமாக வழங்கியது. இந்த தொகையை, ஒன்றியத்தின் வருமானமாக கணக்கில் எடுத்து வருமானவரித் துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை வருமானவரித் துறை நிராகரித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, தர்மபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் மேம்பாட்டுக்காக, ஒன்றிய அரசு 3 கோடியே 50 லட்சம் ரூபாயை மானியமாக வழங்கி உள்ளது. இந்த மானியத்தை வருவாயாக கருத முடியாது. இது மூலதன வரவு என கூறி வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
