பருவம் தவறிய மழையினால் 5.66 லட்சம் ஏக்கரில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரண தொகையாக ரூ.289.63 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: வேளா ண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழகத்தில் எப்போதெல்லாம் இயற்கை பேரிடர்களால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்களோ, அப்போதெல்லாம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக உதவிக்கரம் நீட்டி அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை அளித்து வருகிறது.

அந்த வகையில், வடகிழக்கு பருவ மழை நவம்பர் / டிசம்பர் 2024 மற்றும் 2025 ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய மழையினால் 5.66 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்பட்டபோது முதல்வர் உத்தரவின்பேரில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வருவாய் மற்றும் வேளாண்மைத்துறை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு 33 சதவீதத்திற்கும் அதிகமாக பாதிக்கப்பட்ட பரப்பினை உறுதிசெய்து, அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து நிவாரணத்தொகை வேண்டி கருத்துரு பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டது.

இதன்படி, வேளாண் பயிர்கள் 4.90 லட்சம் ஏக்கரும், தோட்டக்கலைப்பயிர்கள் 76,132 ஏக்கரும் என மொத்தம் 5.66 லட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்டது என கணக்கிடப்பட்டது. இந்த கணக்கெடுப்பின்படி, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணத்தொகையாக 289.63 கோடி ரூபாய் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 3.60 லட்சம் விவசாயிகளுக்கு ஒப்பளிப்பு செய்து தமிழக அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

கனமழையால் பாதிக்கப்பட்ட 2.80 லட்சம் வேளாண் பயிர் விவசாயிகளுக்கு 254.38 கோடி ரூபாயும், பாதிக்கப்பட்ட 80,383 தோட்டக்கலை பயிர் விவசாயிகளுக்கு 35.25 கோடி ரூபாயும் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிவாரணத்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் எம்.தெரிவித்துள்ளார்.

Related Stories: