இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக்: 600 விசைப்படகுகள் கரைநிறுத்தம்

 

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 12 மீனவர்களை விடுவிக்க கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 22ம் தேதி 449 விசைப்படகுகளில் தக்கச்சிமடம் மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அன்றிரவு தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் விசைப்படகுகள் மீன்பிடித்து கொண்டிருந்தன. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ஜோதிபாஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் இருந்த மீனவர்கள் பிரபாத் (28), சந்தியா நிவாஸ்டன் (33), ஜேம்ஸ் கேயிடன் (23), கயூஸ்ராஜ் (44), டோஜா (16), அந்தோணி டில்மன் (31), ஆக்போ நிஜோ (17), மரிம ஆண்டோ பெஸ்டன் (19), கோர்பசேவ் (37), மதன்சன் (32), நிமல் சகாயம் (31), ஆனந்த் (20) ஆகிய 12 பேரை கைது செய்தனர். படகையும் பறிமுதல் செய்தனர்.

நாளை கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட உள்ள நிலையில், 12 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்த சம்பவம் ராமேஸ்வரம் தீவு மீனவர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கைதான மீனவர்களின் குடும்பத்தினர் தங்கச்சிமடத்தில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையொட்டி ராமேஸ்வரம் மீன்வளத்துறை டோக்கன் அலுவலகத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கங்களின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவும், டிச.26ம் தேதி ராமேஸ்வரம் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் ராமேஸ்வரம் துறைமுகத்தில் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. இதனால் மீன்பிடி பணி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: