பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் இன்று நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் வடபழனி என்றழைக்கப்படும் தண்டாயுதபாணி சுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 24-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. விழாவின் 7-ம் நாளான இன்று மலையடிவாரத்தில் உள்ள தண்டாயுதபாணி தண்ணீர் பந்தலில் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதையொட்டி காலை 10 மணிக்கு மூலவர் தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடு நடந்தது. இரவு 8.35 மணியளவில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த உற்சவர் முருகனுக்கு, வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து மயில் வாகனத்தில் மேளதாளம் முழங்க சுவாமி திருவீதி உலாவும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கூத்தனூர் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர். திருக்கல்யாண உற்சவத்தில் கூத்தனூர், நாட்டார்மங்கலம், செட்டிகுளம், இரூர், பாடாலூர், குரூர், பொம்மனப்பாடி போன்ற கிராமகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணிக்கு சிவன் கோயிலில் இருந்து குதிரை வாகனம், வெள்ளி மயில் வாகனம் மற்றும் அலங்கார பல்லாக்கில் சுவாமி வீதி உலா நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் (புதன்கிழமை) மாலை 4.00 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.
