நெல்லை,ஜன.20: நெல்லையில் பள்ளி, வீடுகளில் புகுந்த பாம்புகளை பாளை தீயணைப்பு நிலைய வீரர்கள் பிடித்து காட்டுபகுதியில் விட்டனர். நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் வகுப்பறை அருகே பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை கண்ட ஆசிரியர்கள் பதற்றம் அடைந்தனர். இதுபோல் சந்திப்பு பாலபாக்கியா நகரில் ஒரு வீட்டில் நல்ல பாம்பு பதுங்கி இருந்ததை வீட்டில் உள்ளவர்கள் பார்த்தனர். இதுகுறித்து பாளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து பள்ளியில் பதுங்கி இருந்த கண்ணாடி விரியன் பாம்பையும், பாலபாக்யா நகரில் வீட்டில் பதுங்கி இருந்த நல்ல பாம்பையும் பிடித்தனர். இதைதொடர்ந்து இரு பாம்புகளையும் காட்டுப்பகுதியில் கொண்டு விட்டனர்.