சென்னை: டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து நிலவி வரும் கடுமையான பனிமூட்டம், மோசமான வானிலை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் நேற்று 4 புறப்பாடு விமானங்கள், 7 வருகை விமானங்கள் என மொத்தம் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில், கடந்த சில தினங்களாக, கடுமையான பனிமூட்டமும், மோசமான வானிலை, காற்று மாசு போன்றவைகளால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. டெல்லி செல்லும் விமானங்கள், டெல்லியில் சென்று தரை இறங்க முடியாமல், வேறு விமான நிலையங்களில் சென்று தரை இறங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு செல்லும் விமான சேவைகள், கடந்த சில தினங்களாக தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், நேற்று சென்னையில் இருந்து டெல்லி, ஜெய்ப்பூர், கொல்கத்தா, காசியாபாத் ஆகிய இடங்களுக்கு செல்லும் நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் டெல்லி, ஜெய்ப்பூர், பாட்னா, புனே, கொல்கத்தா, இந்தூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னை வரவேண்டிய 7 விமானங்கள் நேற்று ரத்து என்று அறிவிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர்.
