மதுரை: ஒன்றிய அரசு மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டுமென என மனு ஸ்மிருதியை சுட்டிக்காட்டி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த மலர்விழி, ஐகோர்ட் கிளை மதுரையில் தாக்கல் செய்த மனு: என் கணவர் மாரிமுத்து மத்திய ஆப்பிரிக்கா நாடான கேமரூனுக்கு 2021ம் ஆண்டு தீப்பெட்டி தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று இருந்தார். அப்போது அங்கு எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். கணவர் இறப்பிற்கு கேமரூன் நாட்டுத் தொழிற்சாலை இந்திய மதிப்பில் ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்குவதாக தெரிவித்தது.
இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மன்னன் என்பவன் மக்களை மகிழ்ச்சியாகவும் வளமாகவும் வைத்திருக்க வேண்டும். மகாபாரதத்தில் மக்களின் வருமானத்தில் ஆறில் ஒரு பங்கைப் பெற்றாலும், மக்களைப் பாதுகாக்கத் தவறிய மன்னன் பாவியாகிறான் என்று மனு சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதேதான் புத்த மதத்திலும் குறிப்பிடப்படுகிறது. மகாத்மா காந்தி கூட தனது சுயசரிதை புத்தகத்திலும் குறிப்பிடுகிறார். தற்போது இங்கு மன்னனாக இருப்பது அரசுகள். ஒன்றிய அரசு மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டும்.
அரசானது வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் மூலம் பெரும் அந்நியச் செலாவணியை ஈட்டுகிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து அரசுகள் நன்மைகளைப் பெறும்போது, அத்தகைய வெளிநாட்டு வேலைவாய்ப்பால் பிரச்னைகள் எழும்போது அவர்களை மீட்க விரைந்து செயல்பட்டு உரிய இழப்பீடு கொடுப்பதும் கடமையாகும். எனவே, தற்போதுள்ள கால சூழலுக்கு ஏற்ப சட்டங்களில் சில திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டும். தனது குடிமக்கள் பாதுகாப்பு குறித்து ஒன்றிய அரசு, கொள்கை சார்ந்த சட்ட திட்டத்தை வகுக்க வேண்டும். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டுள்ள மனுதாரர் ஏழையாக உள்ளார். எனவே, அவர் வாழ்வாதாரம் பாதுகாக்கபட வேண்டும். இதற்காக ஒன்றிய அரசு சட்டப் போராட்டத்தையும் நடத்த தயாராக இருக்க வேண்டும். இழப்பீடு வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய தூதரகம் எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.
