பரமக்குடி அரசு கல்லூரியில் டிச.20ல் வேலை வாய்ப்பு முகாம்

பரமக்குடி,டிச.17: தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிர்வாகம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 100க்கும் மேற்பட்ட பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை நாடுநர்களை தேர்வு செய்ய இருக்கின்றன.

இம்மாவட்டத்தைச் சார்ந்த வேலைவாய்ப்பற்ற 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களும், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகளும், முதுகலை, இளங்கலை பட்டதாரி ஆசிரியர்கள், செவிலியர் மற்றும் லேப் டெக்னீசியன் கல்வித்தகுதியுடைய அனைவரும் இம்முகாமில் கலந்துகொள்ளலாம். அனைவரும் தங்களுக்கான பணியினை தாங்களே தேர்வு செய்வதற்கான இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தமிழ்நாடு தனியார் துறை இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது rmdjobfair01@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, 04567 230160 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

எனவே, வேலைநாடுநர்கள் தங்களது முழு பயோடேட்டா, அனைத்து அசல் கல்விச்சான்றுகள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

Related Stories: