பெரியமாரியம்மன் வகையறா கோயில்களில் கும்பாபிஷேகம்

ஈரோடு, ஜன. 19: ஈரோடு பெரியமாரியம்மன் வகையறாவை சேர்ந்த 2 கோயில்களில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஈரோடு மாநகரில் பெரியமாரியம்மன் கோயில் வகையறாவை சேர்ந்த சின்ன(நடு) மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்களும் உள்ளன. இதில், காரை வாய்க்கால் மாரியம்மன் கோயில் பக்தர்கள் வசதிக்காக விரிவுப்படுத்தியும், சின்னமாரியம்மன் கோயிலில் புனரமைப்பு செய்யும் திருப்பணிகள் முடிந்து நேற்று 2 கோயில்களிலும் கும்பாபிஷேக விழா நடந்தது.

இதில், இரு கோயில்களிலும், நேற்று காலை 7 மணிக்கு நான்காம் கால யாகபூஜை, நாடிசந்தானம் வைத்தல், மகா தீபாராதனை, யாகசாலையில் இருந்து கலச புறப்பாடு நடந்தது. காரைவாய்க்கால் மாரியம்மன் கோயிலில் காலை 10 மணிக்கு, சின்னமாரியம்மன் கோயிலில் காலை 10.30 மணிக்கும் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஈரோடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. ராமலிங்கம், கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.தென்னரசு, இந்துசமய அறநிலையத்துறை இணை கமிஷனர் மங்கையர்கரசி, உதவி கமிஷனர் அன்னக்கொடி, செயல்அலுவலர் ரமணிகாந்தன், சக்தி மசாலா உரிமையாளர் சாந்தி துரைசாமி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: