சாலை விதியை கடைப்பிடித்தவருக்கு ரோஜாபூ, இனிப்பு கொடுத்து வரவேற்பு

திருமங்கலம், ஜன.19:  திருமங்கலத்தில் சாலை பாதுகாப்பு மாதத்தினையொட்டி காரில் சீட்பெல்ட், டூவிலர்களில் ஹெல்மேட் அணிந்து வந்தவர்களுக்கு டிஎஸ்பி விநோதினி ரோஜா பூ மற்றும் இனிப்புகளை வழங்கினார். தமிழகத்தில் நேற்று முதல் வரும் பிப்ரவரி 17ம் தேதி வரையில் சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் சாலை பாதுகாப்பு விதிகளை சரியாக கடைப்பிடிக்கும் வாகனோட்டிகளை போலீசார் கவுரவித்தனர். கப்பலூர் சந்திப்பில் திருமங்கலம் டிஎஸ்பி விநோதினி தலைமையில் போலீசார் கார்களில் சீட்பெல்ட் அணிந்து ஓட்டி வந்தவர்களை நிறுத்தி அவர்களுக்கு ரோஜா பூக்களை பரிசாக கொடுத்தனர். டூவிலரில் ஹெல்மெட் அணிந்து ஓட்டி வந்த வாகனோட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. அதேநேரத்தில் சீட்பெல்ட் அணியாமல் கார்களில் பயணம் செய்தவர்கள், ஹெல்மெட் போடாமலும் டூவிலர்களில் வந்தவர்களை நிறுத்தி அவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகளை வழியுறுத்தி டிஎஸ்பி அனுப்பி வைத்தார். திருமங்கலம் போலீசாரின் இந்த நூதனமான அணுகுமுறை வாகனோட்டிகளை பெரிதும் கவர்ந்தது.

Related Stories: