ஸ்ரீபுரம் கோயிலில் தியான மண்டபம்: ஜனாதிபதி 17ம்தேதி திறந்து வைக்கிறார்

வேலூர்: ஸ்ரீபுரம் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள தியான மண்டபத்தை ஜனாதிபதி முர்மு வரும் 17ம் தேதி திறந்து வைக்கிறார்.இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு வேலூர் மாவட்டத்திற்கு வரும் 17ம்தேதி வர உள்ளார். அவர் ஸ்ரீபுரம் தங்க கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடு குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். இதில் ஜனாதிபதி வருகையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடு, போக்குவரத்து, ஆம்புலன்ஸ், மருத்துவ வசதி உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. இதில் எஸ்பி மயில்வாகனன், டிஆர்ஓ சிவசுப்பிரமணியன், ஸ்ரீநாராயணி பீடம் மேலாளர் சம்பத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூருக்கு வரும் 17ம்தேதி காலை 11 மணியளவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தர உள்ளார். அவருடன் தமிழக கவர்னர் ரவி, மத்திய அமைச்சர் முருகன் ஆகியோர் வருகின்றனர். பொற்கோயில் வளாகத்தில் உள்ள வெள்ளியால் அமைக்கப்பட்ட விநாயகர், சொர்ணலட்சுமி, பெருமாள் ஆகிய கோயில்களில் ஜனாதிபதி சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர், சக்தி அம்மாவிடம் ஆசி பெறுகிறார். கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தியான மண்டபத்தை திறந்து வைத்து மரக்கன்றுகளை நட்டு வைக்கிறார். பகல் 12.30 மணிக்கு வேலூரில் இருந்து திருப்பதிக்கு செல்கிறார்.’ என்றனர்.

Related Stories: