அணைக்கட்டு, ஜன. 17: காணும் பொங்கலையொட்டி சோழவரம் கிராமத்தில் மாடுவிடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின.வேலூர் தாலுகா பென்னாத்தூர் அடுத்த சோழவரம் கிராமத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று மாடுவிடும் விழா நடந்தது. மாவட்ட ஆய்வு குழு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அனைவரும் விழா உறுதிமொழி ஏற்று கொண்டதை தொடர்ந்து விழா பகல் 10 மணியளவில் தொடங்கியது. கால்நடை மருத்துவர் சண்முகம் பரிசோதனைக்கு பின்னர், மாடுகள் ஒவ்வென்றாக வீதியில் அவிழ்த்து விடப்பட்டது. சோழவரம், ஊசூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 55 மாடுகள் சீறிபாய்ந்து ஓடியது. 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விழாவை ஆரவாரத்துடன் கண்டு ரசித்தினர். சீறிப்பாய்ந்த மாடுகள் முட்டியதில் காயமடைந்த 2 பேருக்கு முகாமிட்டிருந்த கணியம்பாடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். டிஎஸ்பி ரவிசந்திரன் தலைமையில் 70க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.