திருவாடானை, ஜன.13: தினகரன் செய்தி எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் கீழே சாய்ந்து தண்ணீரில் மூழ்கிவிட்டன. தண்ணீரை வெளியேற்ற வழி இல்லாததால் நெல் கதிர்கள் அனைத்தும் மீண்டும் முளைக்க தொடங்கிவிட்டன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். எனவே அரசு முழு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இது குறித்து தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று திருவாடானை ஆதியூர், மல்லிகுடி, கடம்பகுடி உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட பயிர்களை நேரடியாக ஆய்வு செய்தார்.