ஆண்டிபட்டி, ஜன. 12: தமிழகத்தில் அரசின் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு இலவசமாக ஆடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு கரூர், ஈரோடு பகுதி ஆட்டுச்சந்தையில் வைத்து, வியாபாரிகள் மூலம் ஆடு வழங்கப்படும். அரசு வழங்கும் ரூ.10 ஆயிரத்துக்கு ஏற்றார்போல, ஆடுகளும், குட்டிகளும் வழங்கப்படும். அரசு சார்பில் ஆடுகளை பராமரிக்க பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ.2 ஆயிரம் செலுத்தப்படும். ஆடுகளை கொண்டு செல்வதற்காக போக்குவரத்து செலவுக்காக பயனாளிக்கு ரூ.150 வழங்கப்படும். ஆனால் இந்தாண்டு பயனாளிகளே ஆடுகளை வாங்கி வர வேண்டும். அந்த ஆடுகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதனால், பயனாளிகள் அவர்களது வீட்டில் ஏற்கனவே வளர்த்து வரும் சொந்த ஆடுகள் மற்றும் வாடகைக்கு ஆடுகளை வியாபாரிகளிடம் இருந்து வாங்குவதுபோல காட்டிக் கொண்டனர். இந்த ஆடுகளுக்கு டேக் அடித்து பயனாளிகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆண்டிபட்டி ஒன்றியத்தை பொறுத்தவரை ஆண்டுதோறும் சுமார் 500க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு விலையில்லா ஆடு வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு முதற்கட்டமாக ஒக்கரைப்பட்டி, கோவில்பட்டி, ரெங்கமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அந்தந்த பகுதியில் வழங்கப்பட்டது.