ஊட்டி,ஜன.12: நீலகிரி மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்துவதற்காக மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து ஊராட்சிகளுக்கு குப்பை சேகரிக்கும் பிக்அப் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி தமிழகம் மாளிகையில் நடந்தது. மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கெட்சி லீமா அமாலினி ஆகியோர் முன்னிைல வகித்தனர். கலெக்டர் பங்கேற்று மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து தலா ரூ.7.94 லட்சம் மதிப்பில் மொத்தம் 1.11 கோடி மதிப்பில் 14 குப்பை சேகரிக்கும் பிக்அப் வாகனங்களை ஊராட்சி தலைவர்களிடம் வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில்,நீலகிரியில் திடக்கழிவு மேலாண்மை என்பது ஒரு சவாலாகவே உள்ளது. நீலகிரியை தூய்மையாக வைப்பதற்காக தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊராட்சி பகுதிகளில் குப்பைகள் சேகரிப்பதற்காக மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து 14 பிக்அப் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊராட்சி பகுதிகளில் உள்ள குப்பைகளை சேகரிக்க பயன்படுத்துவதால் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைக்க உதவியாக இருக்கும், என்றார்.